இந்த வலைப்பக்கத்தில் ஃபாலோயர்கள் இணைகிற வேகத்துக்கு, கருத்துக்களும், பகிர்வுகளும் வரவில்லையென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வலைப்பக்கம் உங்களுடையது. உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இங்கே நீங்கள் அறிமுகப்படுத்தலாம். ஒரு பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். ஆரோக்கியமான உரையாடலை துவக்கலாம். அதற்கான வெளி இது.
இல்லையென்றால் ஒருசிலரே மீண்டும் மீண்டும் பேசுகிற கட்டாயம் வந்து சேரும்.
ஒன்று மட்டும் நிச்சயம். பேசுவதை நிறுத்துவதாய் இல்லை.
சரி. இன்றைக்கு நம் நண்பர்கள் சிலர் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆடுமாடு:
மூலதனமான மொழியை உருட்டி பிழியும் லாவகம் வந்துவிட்டால் கவிதை கைக்குள் அகப்பட்ட கலை. வாழ்வின் எல்லா தருணங்களையும் கவிதை ஆக்கும் சக்தி சிலருக்கு உண்டு. அதெல்லாம் கவிதையாகுமா என்கிற மேதாவிதனங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் மிகுந்த சொற்சிக்கனத்தோடும், எளிமையாகவும் கவிதை படைப்பவர் முபாரக். அவரது எல்லா கவிதைகளுமே ஏதாவது ஒரு மெல்லிய உணர்வை, தாக்கத்தை நம்முள் விதைத்து விட்டு போகும் ஆற்றல் கொண்டவை. அவரது, 'சொற்களை தின்னும் பூதமும்' அப்படித்தான்.
க.பாலாசி:
கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி என்னும் இந்த இடுகை மிக நல்ல பகிர்வு... அன்பர் ஆரூரன் விசுவநாதன் தனது மகனுக்கு செய்த கண் சிகிச்சைப்பற்றி எழுதியிருக்கிறார். பலருக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் சிலருக்காவது இந்த விடயம் சென்றடையவேண்டும் என்ற நோக்கின்பொருட்டு இதை பரிந்துரை செய்கிறேன்.
பா.ராஜாராம்:
ரொம்ப பிடிச்ச கவிதை ஒன்று வாசித்தேன்.அது க.பாலாசியுடையது.
முக்கல் முனகல் இன்றி, பிறந்த குழந்தை மாதிரி இருக்கு இந்த கவிதை.
இன்னொன்னு toto-வுடையது. கவிதைகளுக்கு என சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு இவரின் தளம்.
மேலும் இரண்டு நல்ல கவிதைகள். ஒன்று ராகவனின் நதியானவள். இரண்டு அமித்தம்மாவின் பெற்றவள். இரண்டும் ஒன்றுதானோ? :-)
ராகவன்:
நான் நேற்று படித்த " தண்டோராவின் - வாழைப்பூ வாசம்" என்ற சிறுகதையும், எட்டயபுரத்தில், கலாப்ரியா எழுதிய untitled போஸ்ட், ஆச்சியை பற்றிய பதிவும் என்னை ரொம்பவும் பாதித்தது.
குப்பன் யாஹூ:
இன்று நான் வாசித்தது லேகா -யாழிசை ஒரு இளகிய பயணம்- இல் தங்க ராணி குறித்த பதிவு. நாடகங்கள் குறைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் நாடகம் குறித்த புத்தகத்தின் பதிவு இது.
ஜெயமோகன் எழுதி உள்ள சிற்பகலைக்கு ஒரு இழப்பு என்ற பதிவு. அதில் இன்றும் நேற்றும் உள்ள ஆட்சியாளர்கள் பாறைகளையும், மணல் வெளிகளையும், பணத்திற்காக கொள்ளை அடிப்பது குறித்து பதிந்து உள்ளார்.
மாதவராஜ்:
என்.விநாயக முருகனின் ‘சில்லறை’ சிறந்த பகடி. ‘குபீர்’ சிரிப்பு என்று சொல்லப்படும் வார்த்தைக்கான அர்த்தம் கவிதையின் கடைசிவரிகளில் இருக்கிறது.
கே. பாலமுருகனின் ‘வானமும் சில மழைக்காலங்களும்’ சிறந்த வாசிப்பனுபவம் கிடைக்கும். // வாளியின் நீர் மேற்பரப்பில் எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை// என்னும் இந்த வரிகள் அடங்கிய, ஒரு பழங்கிணறு பற்றிய சித்திரமும், நினைவுகளும் விரியும்.
கென் எழுதிய ‘இன்னும் இன்னுமாய் ஒரு காதல் கதை’ மனதில் நின்றது. கரைய வைக்கிற கற்பனை. கலங்க வைக்கிற நிஜம். கதையின் ஆரம்பத்தில் இருக்கிற அவரது கவிதை...... அடேயப்பா!
பைத்தியக்காரன் எழுதிய ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவல் விமர்சனம் முக்கியமான பகிர்வு. சொல்லப்பட்ட விதம் அருமை என்றாலும் சில விமர்சனங்கள் இருக்கின்றன. பின்னூட்டத்தில் தெரிவிப்பேன். பதிவை கதையில் வரும் இந்த வாக்கியத்தைச் சொல்லி முடிக்கிறார்.
''எந்தவொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்கவியலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது மிகவும் அவசியம்...''
இதைப் படித்துவிட்டு- நண்பர் ஆதிமூலக்கிருஷ்ணனின் ‘திரிபுகளின் வேர்’ கதையைப் படித்தபோது சிரிப்பு வந்தது. கூடவே வருத்தமும். எவ்வளவு முரண்பாடு!
நண்பர்கள் இங்கு குறிப்பிட்டு இருக்கிற பதிவுகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள். தங்களுக்குப் பிடித்த பதிவுகளை கீழ்க்கண்ட மெயில்களில் தெரிவியுங்கள்.