இந்த வலைப்பக்கத்தில் ஃபாலோயர்கள் இணைகிற வேகத்துக்கு, கருத்துக்களும், பகிர்வுகளும் வரவில்லையென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வலைப்பக்கம் உங்களுடையது. உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இங்கே நீங்கள் அறிமுகப்படுத்தலாம். ஒரு பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். ஆரோக்கியமான உரையாடலை துவக்கலாம். அதற்கான வெளி இது.
இல்லையென்றால் ஒருசிலரே மீண்டும் மீண்டும் பேசுகிற கட்டாயம் வந்து சேரும்.
ஒன்று மட்டும் நிச்சயம். பேசுவதை நிறுத்துவதாய் இல்லை.
சரி. இன்றைக்கு நம் நண்பர்கள் சிலர் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆடுமாடு:
மூலதனமான மொழியை உருட்டி பிழியும் லாவகம் வந்துவிட்டால் கவிதை கைக்குள் அகப்பட்ட கலை. வாழ்வின் எல்லா தருணங்களையும் கவிதை ஆக்கும் சக்தி சிலருக்கு உண்டு. அதெல்லாம் கவிதையாகுமா என்கிற மேதாவிதனங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் மிகுந்த சொற்சிக்கனத்தோடும், எளிமையாகவும் கவிதை படைப்பவர் முபாரக். அவரது எல்லா கவிதைகளுமே ஏதாவது ஒரு மெல்லிய உணர்வை, தாக்கத்தை நம்முள் விதைத்து விட்டு போகும் ஆற்றல் கொண்டவை. அவரது, 'சொற்களை தின்னும் பூதமும்' அப்படித்தான்.
க.பாலாசி:
கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி என்னும் இந்த இடுகை மிக நல்ல பகிர்வு... அன்பர் ஆரூரன் விசுவநாதன் தனது மகனுக்கு செய்த கண் சிகிச்சைப்பற்றி எழுதியிருக்கிறார். பலருக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் சிலருக்காவது இந்த விடயம் சென்றடையவேண்டும் என்ற நோக்கின்பொருட்டு இதை பரிந்துரை செய்கிறேன்.
பா.ராஜாராம்:
ரொம்ப பிடிச்ச கவிதை ஒன்று வாசித்தேன்.அது க.பாலாசியுடையது.
முக்கல் முனகல் இன்றி, பிறந்த குழந்தை மாதிரி இருக்கு இந்த கவிதை.
இன்னொன்னு toto-வுடையது. கவிதைகளுக்கு என சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு இவரின் தளம்.
மேலும் இரண்டு நல்ல கவிதைகள். ஒன்று ராகவனின் நதியானவள். இரண்டு அமித்தம்மாவின் பெற்றவள். இரண்டும் ஒன்றுதானோ? :-)
ராகவன்:
நான் நேற்று படித்த " தண்டோராவின் - வாழைப்பூ வாசம்" என்ற சிறுகதையும், எட்டயபுரத்தில், கலாப்ரியா எழுதிய untitled போஸ்ட், ஆச்சியை பற்றிய பதிவும் என்னை ரொம்பவும் பாதித்தது.
குப்பன் யாஹூ:
இன்று நான் வாசித்தது லேகா -யாழிசை ஒரு இளகிய பயணம்- இல் தங்க ராணி குறித்த பதிவு. நாடகங்கள் குறைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் நாடகம் குறித்த புத்தகத்தின் பதிவு இது.
ஜெயமோகன் எழுதி உள்ள சிற்பகலைக்கு ஒரு இழப்பு என்ற பதிவு. அதில் இன்றும் நேற்றும் உள்ள ஆட்சியாளர்கள் பாறைகளையும், மணல் வெளிகளையும், பணத்திற்காக கொள்ளை அடிப்பது குறித்து பதிந்து உள்ளார்.
மாதவராஜ்:
என்.விநாயக முருகனின் ‘சில்லறை’ சிறந்த பகடி. ‘குபீர்’ சிரிப்பு என்று சொல்லப்படும் வார்த்தைக்கான அர்த்தம் கவிதையின் கடைசிவரிகளில் இருக்கிறது.
கே. பாலமுருகனின் ‘வானமும் சில மழைக்காலங்களும்’ சிறந்த வாசிப்பனுபவம் கிடைக்கும். // வாளியின் நீர் மேற்பரப்பில் எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை// என்னும் இந்த வரிகள் அடங்கிய, ஒரு பழங்கிணறு பற்றிய சித்திரமும், நினைவுகளும் விரியும்.
கென் எழுதிய ‘இன்னும் இன்னுமாய் ஒரு காதல் கதை’ மனதில் நின்றது. கரைய வைக்கிற கற்பனை. கலங்க வைக்கிற நிஜம். கதையின் ஆரம்பத்தில் இருக்கிற அவரது கவிதை...... அடேயப்பா!
பைத்தியக்காரன் எழுதிய ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவல் விமர்சனம் முக்கியமான பகிர்வு. சொல்லப்பட்ட விதம் அருமை என்றாலும் சில விமர்சனங்கள் இருக்கின்றன. பின்னூட்டத்தில் தெரிவிப்பேன். பதிவை கதையில் வரும் இந்த வாக்கியத்தைச் சொல்லி முடிக்கிறார்.
''எந்தவொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்கவியலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது மிகவும் அவசியம்...''
இதைப் படித்துவிட்டு- நண்பர் ஆதிமூலக்கிருஷ்ணனின் ‘திரிபுகளின் வேர்’ கதையைப் படித்தபோது சிரிப்பு வந்தது. கூடவே வருத்தமும். எவ்வளவு முரண்பாடு!
நண்பர்கள் இங்கு குறிப்பிட்டு இருக்கிற பதிவுகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள். தங்களுக்குப் பிடித்த பதிவுகளை கீழ்க்கண்ட மெயில்களில் தெரிவியுங்கள்.
15 உரையாடல்கள்:
நல்லதொரு பணி.
என்னங்க அப்பிடி சொல்லிட்டீங்க ... கமென்ட் போட தானே நாங்க இருக்கோம் !
தண்டோரா அவர்களின் சிறுகதை எனக்கு மிகப் பிடித்திருந்தது. பைத்தியக்காரனின் நாவல் விமர்சனமும் முக்கியமான பகிர்வு.
இன்று ஜெயமோகனின் கேரளா கடலோரம் குறித்து கட்டுரை வாசித்தேன். மிக கடுமையாக நேராகவே நடப்பதை தாக்கி எழுதி உள்ளார்.
அதே போல சாரு மது வகைகள் , மதுவை பெண் உடம்பில் விட்டு சுவைப்பது என்று குறித்து எல்லாம் விவரித்து எழுதி உள்ளார்.
எனக்கு உள்ள ஆச்சர்யம் ,மகிழ்ச்சி, அதிசயம், இந்த அளவு எழுத்து சுதந்திரம் உள்ளதே என்பது மட்டுமே.
இணையம் கட்டற்ற சுதந்திரம் வழங்கி உள்ளதை நினைக்கும் பொழுது அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
நன்றி மாதவராஜ், நல்ல தேவையான வலைப்பூ இது. வாழ்த்துகள் நன்றி
பூங்குழலியின் என்னவென்று சொல்வது ? (http://poongulali.blogspot.com/2010/02/blog-post_20.html) இடுகையை வாசித்தேன்.! எனக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.ஆனால், அனைவரும் வாசிக்க வேண்டிய இடுகை என்று மட்டும் தோன்றுகிறது!
My guess is that your this work gives a wrong impression that you are trying for another blog aggregator (Tiratti). I think thats why you do not receive expected crowd/contributions.
மற்றைய பகிர்வுகளை நானின்னும் படிக்கவில்லை, ஆனால் ஆடுமாடு அவர்கள் சுட்டியிருக்கிற சொற்களை தின்னும் பூதம் பலபேருக்கு படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்திராத நல்லதொரு பக்கம்.
குப்பன் யாஹூ சார், நிச்சயம் இது இன்னொரு திரட்டியாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் ஆசையும்.
எழுதப்படுகிற எல்லாப் பதிவுகளையும் உடனடியாக திரட்டிகிற பணியை திரட்டிகள் செய்கின்றன. எழுதி முடித்து, சில நாட்களான பிறகே, வெளிவந்த பதிவுகளில் முக்கியமானவற்றின் மீது மீது கவனம் கொண்டு வருவதுதான் வாடாத பூக்களின் நோக்கம். அவைகள் குறித்து தொடர்ந்து உரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படையான தன்மை. மொழி நடை, ரசனை, புரிதல்களில் விவாதங்கள் உருவாக வாய்ப்பிருக்கும். சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், வித்தியாசம் தெளிவாகும் என நினைக்கிறேன்.
பார்ப்போம்.....
லேகாவின் பதிவு முக்கியமானது. வேலுசரவணன் நாடகம் குறித்த நூல் பற்றிய விமர்சனம். இப்படியான நூல்கள் குறித்தும் எழுத நினைப்பதே முக்கியமானதுதான். வேலுசரவணின்ன் நாடகங்கள் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் அற்புதமானது. எனவே இந்த நாவலை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும் என இருக்கிறது.
சி.பாலாசி யின் கௌரவம் வாழ்வின் சூடு தகிக்கும் சொற்சித்திரம். கவிதை என்று சொல்ல மாட்டேன்.
தண்டோராவின் கதை வித்தியாசமாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஞாபங்களின் அடுக்கில் வைத்து, மொழியை காமிராவாக்கி முயற்சித்திருக்கிறார்.
பைத்தியக்காரனின் நூல் விமர்சனம் மிகச் சிறப்பு. ஜெயமோகனின் கட்டுரைகளை மேற்கோளிட்டி சொல்லி இருப்பது வேண்டுமென்றே திணிக்கப்பட்டதாதாக துருத்துகிறது எனக்கு. நாவல் பற்றிய முக்கியத்துவத்தை நாவலேச் சொல்லுகிறதே....!
நன்றி மாதவராஜ். அப்புறம் எனது பெயர் விநாயகப்பெருமாள் இல்லை. விநாயகமுருகன் :)
மன்னிக்கணும் விநாயக முருகன், சரி செய்து விடுகிறேன்.
thanks for the encouragement thozhar.i will also share my thoughts in future.(sorry ..no tamil fonts here)
க பாலாசியின் கவிதை யதார்த்தமானதாக உள்ளது
நடுத்தர குடும்பத்தின் வரவு செலவை மீறியதான குடும்பத்தின் மானச்செலவுகளை பற்றியது
விநாயக முருகனின் "சில்லறை"
மாது அண்ணா எழுதிய "லும்பன்கள்"
பதிவு நியாபகத்திற்கு வந்தது
Post a Comment